கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு

பள்ளிகளை போல கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த புதிய விதிமுறைகள் அமலாக உள்ளன. இதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளில் வரம்புகளை மீறி சில ஆசிரியர்கள் ஆபாசமாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வரும் 7ஆம் தேதி வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு செல்வதை போலவே ஆன்லைன் வகுப்புக்கும் உடை கட்டுப்பாட்டை அமல்படுத்த இக்குழு பரிந்துரைக்கும் என தெரியவந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவு செய்வது, புகார் பிரிவை உருவாக்குவது, இணையவசதிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட பரிந்துரைகளும் இடம் பெறலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக வரும் 11ஆம் தேதிக்குள் அரசிடம் வரைவு அறிக்கை சமர்பிக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment