தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் உள்ளிட்டவற்றிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதிலும் சிறிய பெட்டிக்கடைகளில் கூட யுபிஐ வசதியை பயன்படுத்தி பலரும் பண பரிவர்த்தனை செய்வதை காண முடிகிறது. தேசியமயாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மொத்தம் 23 செயல்பட்டு வரும் நிலையில், இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்.

தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் கியூ ஆர் கோடு மூலமாக யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
No comments:
Post a Comment